சிறுபான்மை மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டம் தொடக்கம்

14/12/2010 10:30
பள்ளிப்படிப்பு, பள்ளி மேற்படிப்பு மற்றும் தொழிற்கல்வி பயிலும் சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு 2010-11 ஆம் ஆண்டுக்கான கல்வி உதவித்தொகைகளை வழங்கும் திட்டத்தை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

 

 

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

 

 

நடப்பு 2010-11 ஆம் ஆண்டில் ஒரு லட்சத்து 71 ஆயிரத்து 643 மாணவ, மாணவியர்கள் பயன் பெறும் வகையில், பள்ளி படிப்பு கல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழ் ரூ.19.02 கோடியும், 30 ஆயிரத்து 79 மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் பள்ளி மேற்படிப்பு உதவித் தொகை திட்டத்தின் கீழ் ரூ.8.66 கோடியும், 1809 மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழ் ரூபாய் 4.73 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.   இத்திட்டத்தின் மூலம் மொத்தம் ரூ. 32.41 கோடி கல்வி உதவித்தொகையாக 2 லட்சத்து 3 ஆயிரத்து 531 சிறுபான்மையின மாணவ, மாணவியருக்கு வழங்கப்பட்டு பயனடையவுள்ளார்கள்.  இது  கடந்த ஆண்டை விட ரூ.5.91 கோடி  கூடுதலாகும்.

 

 

ஓன்றாம் வகுப்பு முதல் பத்தாம்  வகுப்பு வரை  பள்ளிப்படிப்பு பயிலுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ. 1000 முதல் ரூ. 5000 வரையிலும், விடுதியில் தங்கி பயில்பவராக இருப்பின் அதிகபட்சமாக ரூ. 10,000 வரையிலும், 11 ஆம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை (ஐடிஐ, ஐடிசி, பாலிடெக்னிக், இளங்கலை-முதுகலை பட்டபடிப்பு வரை, ஆசிரியர் பயிற்சிகள் உட்பட) பள்ளி மேற்படிப்பு பயிலுபவர்களுக்கு அதிகபட்சமாக ரூ. 12,350/- வரை பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித் தொகையாகவும், நான்காண்டு மற்றும் அதற்கு மேல் தொழிற் கல்வி-தொழில்நுட்ப கல்வி பயிலும் சிறுபான்மையின மாணவ, மாணவியருக்கு அதிகபட்சமாக ரூ. 30,000 வரை தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகையும் வழங்கப்பட்டு வருகிறது.  கடந்த 2007-08 முதல் 2009-10 ஆம் ஆண்டு வரை பள்ளி படிப்பு கல்வி உதவித் தொகை திட்டத்தின்கீழ் ரூ.21.96 கோடியும், பள்ளி மேற்படிப்பு உதவித் தொகை திட்டத்தின் கீழ் ரூ.14.50 கோடியும் மற்றும் தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழ் ரூ. 13.16 கோடியும் கல்வி உதவித்தொகையாக வழங்கப்பட்டு, இதன் மூலம் 2 லட்சத்து 21 ஆயிரத்து 27 சிறுபான்மையின மாணவ, மாணவியர் பயனடைந்துள்ளார்கள் என அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

dinamani.com